தமிழகத்தில் தற்போது கொரோனா பேரிடர் காரணமாக ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு ரயில்வே தமிழகத்தில் இயங்கிய 6 சிறப்பு ரயில்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக ரயில்வே துறை கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளும் கடந்த சில மாதங்களாக முழுமையாக இயங்கி வந்த நிலையில் ரயில்வே துறை மட்டும் முழுமையாக இயங்க அனுமதி வழங்கப்படவில்லை.இதனால் ரயில்வே கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகி வந்தது. இருந்தும் தற்போது விரைவு ரயில்கள் மட்டும் இயங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை கடுமையான
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் நடமாட்டம் பொதுவெளியில் குறைந்துள்ளது.ஊரடங்கில் வழக்கம் போல் சிறப்பு மற்றும் விரைவு ரயில்கள் இயங்கும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது ரயில்களில் மக்களின் கூட்டம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு ரயில்வே அதிரடியான அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி பயணிகள் வருகை குறைவதன் காரணமாக மே மாதம் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை – திருச்செந்தூர், சென்னை – மேட்டுப்பாளையம் ஆகிய வழித்தடங்களில் இரு மார்க்கத்திலும் இயங்கும் 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.