நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை பலி எண்ணிக்கையால் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கு விதிகளை கடுமையாக்கி வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் முழு ஊரடங்கு மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 20,846 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 136 ஆக பதிவாகியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு வரும் மே 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இம்முறை, மாநிலத்தின் தொற்று மிக வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட அனுமதி இல்லை. உணவகங்கள், சலூன்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர மருந்தகங்கள், கண் கண்ணாடி கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும்