உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 2020 – 2025 அடுத்த ஐந்தாண்டுகளில் நேரடியாக மற்றும் மறைமுகமாக 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பெஜோஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை,
இந்த வேலைவாய்ப்புகள் ஆனது தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கருத்துருவாக்கம், ரீடெயில், தயாரிப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து போன்ற துறைகளில் உருவாக்கப்படவுள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்த அவர், எங்கள் நிறுவன பணியாளர்களின் உழைப்பு, சிறிய வர்த்தகர்களின் படைப்பாற்றல் மற்றும் வாடிக்கையாளர்களின் உற்சாகமுள்ள பங்களிப்பே அமேசான் வளர்ச்சிக்கு அசைக்க முடியாத தூண்களாக உள்ளன.
இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் அமேசான் நிறுவனம் முதலீடுகளால் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அடுத்த ஐந்தாண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கருத்து உருவாக்கம், மென்பொருள் மேம்பாட்டு பொறியியல், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற பிரிவுகளில் திறமையானவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க அமேசான் முதலீடு உதவிகரமாக இருக்கும்.
ரூ. 7,000 கோடி முதலீடு!!
கடந்த ஜனவரி 15 புதன் கிழமை அன்று இணைய வர்த்தகத்தில் ஈடுபடும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவ ரூ. 7,000 கோடி இந்தியாவில் முதலீடு செய்வதாகவும், வரும் 2025க்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூ. 70,000 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அமேசான் நிறுவனர் தெரிவித்தார்.