தொடர்ந்து பருவமழை மாற்றம் காரணமாக, இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் பனிப் பொழிவு என வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது இதன் தொடர்ச்சியாக லட்சத்தீவுகள், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (ஜனவரி 6) முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த வானிலை மாற்றத்தால் சென்னை வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடனேயே இருக்குமே தவிர 48 மணி நேரத்திற்கு பிறகே மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தென் தமிழக கடலோர பகுதிகளான மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் ஜனவரி 6 முதல் ஜனவரி 10ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.