முருகன் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பிய ‘கருப்பர் கூட்டம்’ எனும் யூ டியூப் சேனலுக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அந்த சேனலின் அனைத்து வீடியோக்களும் தற்போது நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
கந்த சஷ்டி கவசம் அவதூறு:
இந்துக்களின் கடவுள் முருகன் கந்த சஷ்டி கவசம் குறித்து மிகவும் ஆபாசமான மற்றும் அவதூறு கருத்துகளை தெரிவித்து வீடியோ பதிவிட்ட கருப்பர் கூட்டம் எனும் யூ டியூப் சேனலுக்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர்.
இது தொடர்பாக அந்த யூ டியூப் சேனலை சேர்ந்த ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொருவர் புதுவையில் போலீசாரிடம் சரணடைந்தார். மேலும் 5 பேரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் நேற்று அந்த சேனலை முடக்க யூ டியூப் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம் எழுதினர். இந்நிலையில் இன்று கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் இதுவரை பதிவிடப்பட்டு இருந்த அனைத்து வீடியோக்களும் (500 வீடீயோஸ்) சைபர் கிரைம் போலீசார் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.