தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஓட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி 9) முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை மிதமானது முதல் லேசானது வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று (ஜனவரி 9) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த வானிலை மாற்றத்தால், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னர் வளைகுடா, குமரி கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் இன்று (ஜனவரி 9) முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.