பீகார் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, நவம்பர் 7ல் நடக்க உள்ளது. இந்நிலையில், ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார், இதுதான் தனது கடைசி தேர்தல் என அறிவித்துள்ளார்.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு
பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மீண்டும் முதல்வர் ஆகும் எண்ணத்தில் ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். முதல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் கடைசி மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ல் நடக்கவுள்ளது.
இதில் 78 தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் பங்குபெற உள்ளனர். பூர்ணியா மாவட்டத்தில், இதற்கான பிரச்சாரத்தில் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய நிதிஷ்,’ நவம்பர் 7ம் தேதியுடன் பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிகின்றது. இதுதான் தேர்தலின் கடைசி நாள். இதைப்போல, இதுதான் எனக்கும் கடைசி தேர்தல்,’ என கூறினார். கடந்த 1977ல், முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இதில் தோல்வி அடைந்த நிதிஷ், மீண்டும் 9 ஆண்டுக்குப்பின் 1985ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.