நாடு முழுவதும் செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இயக்கப்படும் ரயில்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இதில் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே ரயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரயில் இயக்கம்:
தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் சேவைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ரயில்கள் இயங்கும் எனவும், இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரயில்கள் இயக்கத்திற்கான வழிகாட்டு முறைகளை வெளியிட்டு உள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
- செப்டம்பர் 7 முதல் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், செப்., 9 முதல் பரங்கிமலை – சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும்.
- ஸ்மார்ட் கார்டு மற்றும் QR கோட் முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
- முகக்கவசம் அணியாதவர்கள், நோய் அறிகுறி உடையவர்கள் மெட்ரோ ரயில்களில் பயணிக்க அனுமதி இல்லை.
- ஒரு லிப்ட்டில், ஒரே நேரத்தில் 3 பேருக்கு மேல் செல்லக்கூடாது.
- ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 20 நொடிகளுக்கு பதிலாக, 50 நொடிகள் ரயில் நிற்கும். காற்றோட்ட வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- அனைத்து ரயில் பெட்டிகளும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்.
- காலை 8.30 – 10.30 மற்றும் மாலை 5 – 8 ஆகிய அலுவலக நேரங்களில் மட்டும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும்.
- அலுவலகம் & கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும்.