மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது.
WPL:
இந்தியாவில் முதன் முறையாக, மகளிருக்கான பிரீமியர் லீக் தொடர் 5 அணிகளுக்கு இடையே கடந்த மார்ச் 4ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தனர். இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியானது நேற்று மும்பையில் நடைபெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில், ஷஃபாலி வர்மா 11, ஆலிஸ் கேப்ஸி 0, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 என அடுத்தடுத்து, மும்பை அணியின் இஸ்ஸி வோங் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனை தொடர்ந்து, நிதானமாக விளையாடிய டெல்லி அணி, மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், விக்கெட்டை இழக்க 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில், ஹேலி மேத்யூஸ் (13), யாஸ்திகா பாட்டியா (4) என பெவிலியன் திரும்ப ஹர்மன்பிரீத் கவுர் சற்று அதிரடி காட்டி 37 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 60 ரன்கள் அடித்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை 19.3 ஓவரில் உறுதி செய்தார். இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியானது, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், WPL லின் முதல் சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றது.