வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குடியாத்தம் பகுதியில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஆரம்ப காலத்தில் சென்னையில் மட்டுமே அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மதுரை, தூத்துக்குடி, வேலூர் உட்பட பிற மாவட்டங்களிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.
அதன்படி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஜூலை 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவித்து உள்ளார். கடைகள் காலை 6 மணிமுதல் 10 மணி வரை திறந்து இருக்கும் என கூறிய ஆட்சியர், இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என தெரிவித்து உள்ளார். ஜூலை 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எவ்வித தளர்வுகளும் இன்றிய ஊரடங்கில் எந்த கடைகளும் திறந்திருக்காது என அறிவித்துள்ளார்.