தமிழகத்தில் கல்வி நிலையங்களுக்கு செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதை செய்தால் இனி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
காவல்துறை எச்சரிக்கை:
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல பேருந்து சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் கீழே விழுந்து உயிர் பறிபோகும் அசம்பாவிதம் தொடர் கதையாக உள்ளது. இதனை தடுக்க, அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு வழியாக, சென்னையில் படிக்கட்டு பயணம் மேற்கொண்ட மாணவர்களை மாநகர போலீஸ் வழியிலேயே மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இது குறித்து, அவர்களது கல்வி நிறுவனங்களுக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும், சில மாணவர்களிடம் இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி கடிதத்தையும் எழுதி வாங்கினர்.
இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். போலீசின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.