தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த புது ஊரடங்கு ஜூன் 21ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஏற்கனவே உள்ள ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏறகனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 14 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
- வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்
- மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர், எனினும் இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதியில்லை
- மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்
- வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்
- கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
- மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
தற்போது உள்ள ஊரடங்கு வரும் 14-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுக்கவும் இந்த முழு ஊரடங்கு 14-6-2021 முதல் 21-6-2021 காலை 6-00 மணி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்