தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார். மேலும் 10ம் வகுப்பு ரிசல்ட் தொடர்பாக ஒரு சில அறிவிப்புகளையும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆரம்ப காலத்தில் சென்னையில் மட்டும் அதிகரித்து வந்த தொற்று தற்போது பிற மாவட்டங்களிலும் வீரியம் எடுக்கத் தொடங்கி இருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இதனால் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நேற்று தமிழகத்தில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உட்பட அனைத்து வித பட்டபடிப்புகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்வது குறித்து யுஜிசி அளிக்கும் பரிந்துரையை வைத்து உத்தரவிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் விளக்கம் அளித்து உள்ளார். இந்நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என் தெரிவித்து உள்ளார். மேலும் ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் எனவும், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 14 தொலைக்காட்சி சேனல் வாயிலாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.