தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 37 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் புதிதாக 3 மாவட்டங்கள் உருவாக தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்ற ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்டங்கள்:
கடந்த ஆண்டில் மட்டும் நிர்வாக முறைகளைச் சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக பெரிய பெரிய மாவட்டங்களை இரண்டு, மூன்று தொகுதிகளாகப் பிரித்து அவற்றைப் புதிய மாவட்டங்களாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி; வேலுார் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு உருவாகவுள்ள மாவட்டங்கள்:
சேலம் மாவட்டத்தில் இருந்து எடப்பாடியை தனி மாவட்டமாக உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளச்சியையும் நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையையும் தனி மாவட்டமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அறிவிப்பை நடப்பு தொடரின் விதி எண் 110ன் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு புதிதாக 3 மாவட்டங்கள் உருவானால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 40 ஆக உயரும்.