நாடு முழுவதும் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வான முடிவுகள் செப். 7 ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது.
35% மட்டுமே தேர்ச்சி:
இந்தியாவில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (NDA ) வருடம் தோறும் நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் கடந்த ஜூலை 17ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். மேலும் தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நீட் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையாததால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதும் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த செப் 7 ஆம் தேதி வெளியானது. மேலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டை விட குறைவான அளவே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து தமிழக அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வு எழுதிய 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் 172 பேரில் 104 பேர் தேர்ச்சி அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது என்பதுடன், நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 80% பேர் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரமான பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பல தரப்பில் இருந்து தற்போது கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.