தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும், எதிர்காலத்திலும் அம்முறையையே அரசு கடைபிடிக்கும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இருமொழிக் கொள்கை:
நாட்டில் புதிய கல்விக்கொள்கையை கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் சில எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய கல்விக்கொள்கையில் முக்கியமான ஒன்று ‘மும்மொழிக் கொள்கை’. ஆனால் பல மாநிலங்கள் இதனை ஏற்க மறுத்து விட்டன. மத்திய அரசு இதன் வாயிலாக இந்தி திணிப்பு செய்வதாக பலர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமையில் காணொளிக்காட்சி வாயிலாக விவாதிக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி, மாநில கல்வி அமைச்சர்கள், ஆளுநர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் 100 ஆண்டுகள் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். குடியரசுத் தலைவர் பேசுகையில், மாநில அரசுகள் புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களது கருத்துகளை கூறுமாறு தெரிவித்தார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
கூட்டத்திற்குப் பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் இருமொழிக்கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் அதுவே தொடரும் என கூறியுள்ளார். நுழைவுத் தேர்வுகள் காரணமாக மாணவர்களுக்கு சுமை அதிகரித்துள்ளதாகவும், தேசிய தேர்வு முகமை கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய தேசிய கல்விக்கொள்கையில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதத்தை 2035ம் ஆண்டிற்குள் 50% ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் 2019-2020 நடப்பாண்டிலேயே அரசு அதனை சாதித்துக் காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.