நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் கேட்கப்படும் கேள்விகள் மத்திய பாடத்திட்டத்தில் இருந்து எடுக்கப்படுவதால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பலரது மருத்துவ கனவு களைந்து தற்கொலை முடிவையும் எடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு மருத்துவ சேர்க்கையில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு மட்டுமே இடம் கிடைக்கும் நிலை உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ சேர்க்கை:
கொரோனா பரவலுக்கு மத்தியில் கடும் எதிர்ப்புகளையும் மீறி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நீட் தேர்வு கடந்த செப்.13ம் தேதி நடத்தப்பட்டது. இதற்கான முடிவு சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிலையில், பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று உள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன், நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்ததும் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதனால் விடைத்தாட்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பில், நீட் தேர்வில் எந்த விதமான குளறுபடிகள் இல்லை எனவும், முறைகேடு குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்பும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் இம்முறை தேர்ச்சி பெற்றிருந்தாலும் கட் ஆப் மதிப்பெண்கள் மூலமே சேர்க்கை நடைபெறும் என்பதால், குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற மாணவர்களுக்கு சீட் கிடைப்பது கடினமே.
நடப்பாண்டு நீட் தேர்வில் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசின் இலவச பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்களை ஒப்பிடும் போது 8 பேருக்கு மட்டுமே சீட் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் பல மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்காததும் பெரும் சிக்கலாக உள்ளது.