தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் அவ்வாறு எந்த கடன்களும் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
கொரோனா பாதிப்பு:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய கிருஷ்ணகிரி சென்றிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கிருஷ்ணகிரியில் கொரோனா பாதிப்பு மிக குறைவாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், ரூ. 10 ஆயிரம் கோடி இதுவரை கொரோனா தடுப்புப் பணிகளுக்கு செலவிடப்பட்டு உள்ளதாக கூறினார்.
அரசின் நிதி நிலவரத்துக்கு ஏற்றாற்போல் தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இதுவரை 672 கோடி ரூபாய் வழங்கி உள்ளது என கூறினார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறிய முதல்வர், அவர்களுக்குத் தேவையான கவச உடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு உள்ளதாக கூறினார்.
கொரோனா தடுப்புப் பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் தான் கட்டுப்படுத்த முடியும் என முதல்வர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளும் போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டு உள்ளார். தமிழகத்தில் உள்ள வங்கிகளில் தங்க நகைக்கடன் உட்பட எந்த விதமான கடன்களும் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதல்வர் விளக்கம் அளித்து உள்ளார்.