தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர ஜூலை 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதற்கான இணையதள முகவரிகளும் வெளியிடப்பட்டு உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பம்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இன்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அரசு சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே இன்ஜினியரிங் படிப்புகளில் சேர கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க இணையதள முகவரிகள் வெளியிடப்பட்டு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, மாணவர்கள் வரும் ஜூலை 20ம் தேதி முதல், www.tngasa.in, www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை பதிவேற்றி பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.