ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர் ருயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பதி அரசு மருத்துவமனையில் சோகம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த நிலையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஹரி நாரயணன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, “சென்னையில் இருந்து மருத்துவமனைக்கு வரும் ஆக்சிஜன் டேங்கர் வர தாமதமானது. இதற்கிடையில் மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் ஐ.சி.யுவில் வென்டிலேட்டர்களில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜனை வழங்க மொத்த சிலிண்டர்களையும் பயன்படுத்தினர்”.
இரவு 8 மணி முதல் 8.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, ஆக்சிஜன் அழுத்த பிரச்சினைகள் காரணமாக, வென்டிலேட்டர் ஆதரவில் இருந்த சில கொரோனா நோயாளிகள் உயிர் இழந்தனர். இது ஐந்து நிமிட இடைவெளியில் நடந்தது. தற்போது ஆக்சிஜன் டேங்கர் வந்து நிலைமை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.