மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கரன் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
மாவட்ட ஊராட்சி தேர்தல்:
தமிழகம் முழுவதும் ஜனவரி 11 அன்று மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக மறைமுகமாக இந்த தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் போதிய நேரமின்மையினால் சிவகங்கை மாவட்ட தேர்தல் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. அது மீண்டும் ஜனவரி 30 அன்று ஒத்திவைக்கப்பட்டது. அன்றும் நடைபெற முடியாததால் மூன்றாவது முறையாக மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அன்றும் நடக்கவில்லை பின் 7 மாதங்களாக நடத்த முடியாத காரணத்தினால் திமுக சார்பாக வழக்கு தொடரப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் டிசம்பர் 4-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலும், பிற்பகல் 3 மணிக்கு துணை தலைவர் தேர்தலும் நடைபெறும் என தீர்ப்பு வழங்கியது. ஆனால் டிசம்பர் 4 அன்று சிவகங்கை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் வந்ததால், அன்றும் தேர்தல் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று காலை 10 மணிக்கு தலைவர் தேர்தலும், பிற்பகல் 3 மணிக்கு துணை தலைவர் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் செந்தில், அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கர் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் திமுக மற்றும் அதிமுக அணிகள் இருவரும் தலா 8 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறை நடத்தப்பட்டது. அதில் அதிமுக அணி வேட்பாளர் பொன்மணி பாஸ்கரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது