நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக செப்டம்பர் 25 முதல் 46 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் மத்திய அரசு அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கு:
இந்தியாவில் நாள்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை 79,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. மேலும் தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கத்தில் அதிகளவிலான தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளதே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் மீண்டும் 46 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உள்ளதாக கடிதம் ஒன்றின் ஸ்க்ரீன் ஷாட் வைரலாக பரவி வருகிறது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
சமூக வலைதளங்களில் பரவி வரும் செப்டம்பர் 10 தேதி வெளியானதாக குறிப்பிடப்பட்டு உள்ள அந்த அறிக்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகவும், செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் 46 நாட்கள் கண்டிப்பாக நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அந்த அறிக்கை போலியானது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அவ்வாறு மத்திய அரசிற்கு எவ்வித வலியுறுத்தல்களையும் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.