சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நெல்லை சரக டிஐஜியிடம் இருந்து சிபிசிஐடி டிஎஸ்பி பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 19 தேதி ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கைது செய்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. மேலும் இந்த வழக்கை ஐகோர்ட் கிளை தீவிரமாக கண்காணிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் உறுதியளித்த ஐகோர்ட் கிளை, பிரேத பரிசோதனை அறிக்கை, மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
விசாரணை அதிகாரியான மாஜிஸ்திரேட்டிடம் முறையற்ற வகையில் நடந்து கொண்டதால் தூத்துக்குடி கூடுதல் எஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் மீது ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. கொரோனா சூழலில் ஊரடங்கு காரணமாக மத்திய அரசின் ஒப்புதல் பெற்று சிபிஐ அதிகாரிகள் எப்போது வந்து விசாரிப்பர் என்பது தெரியவில்லை மேலும் இந்த விசாரணை தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
சிபிசிஐடி விசாரணை..!
இந்த வழக்கை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரிக்க வேண்டும். டிஜிபியின் முறையான உத்தரவுக்காக அவர் காத்திருக்க வேண்டியதில்லை. ஐகோர்ட் உத்தரவு அடிப்படையில் உடனடியாக விசாரணையை துவக்க வேண்டும். இந்த விசாரணையை ஐகோர்ட் கண்காணிக்கும். இவரின் விசாரணையே சரியான பாதையில் செல்வதாக அரசு நினைத்தால் சிபிசிஐடி விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமாரிடம் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபின்பு ஒப்படைத்தார். இந்த ஆவணங்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இன்று தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.