கர்நாடக மாநிலத்தில் காவல் துறையில் 3-ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீட்டை வழங்கி, மந்திரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பிற்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இடஒதுக்கீடு:
உலகம் முழுவதும் 3-ம் பாலினத்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்களால் ஒதுக்கப்படுவதால், தங்கள் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். மேலும் அரசால் வழங்கப்படும் சலுகைகளும் அவர்களுக்கு சரியாக கிடைப்பது இல்லை என்ற புகாரும் எழுந்து உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக கர்நாடகத்தில் 3-ம் பாலினத்தவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர்களுக்கு போலீஸ் துறையில் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஒதுக்கீடு குறித்தது பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “79 பணி இடங்கள் மீதமுள்ள 3,064 போலீஸ் பணி இடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. அவற்றில் 68 இடங்கள் 3-ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டு மொத்தமாக கர்நாடக ஆயுதப்படை போலீஸ் பிரிவில் 79 இடங்கள் 3-ம் பாலினத்தவருக்கு போலீஸ் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.
மேலும் இந்த முக்கிய அறிவிப்பின்படி,போலீஸ் துறையில் சேருவதற்கு கல்வித்தகுதி மிகவும் அவசியமாகும். எனவே உரிய கல்வித்தகுதியுடன் இருக்கும் திருநங்கைகள், போலீஸ் துறையில் சேர்ந்து பணியாற்ற முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.