முருகனின் கந்த சஷ்டி கவசத்தைப் பற்று அவதூறாக பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
ரஜினிகாந்த் பாராட்டு:
கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் இந்துக் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமான கருத்துகளை கூறி வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்ப்புகள் கிளம்பியது. இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அந்த யூ டியூப் சேனலை சேர்ந்தவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அந்த சேனலில் பதிவிடப்பட்டு இருந்த அனைத்து 500 வீடியோக்களும் நேற்று யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ட்வீட் செய்துள்ளார்.
அவரது பதிவில் #கந்தனுக்கு அரோகரா என்கிற ஹாஷ்டேக் உடன், கந்த சஷ்டி கவசத்தை மிக கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும். “எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!! என பதிவிட்டு உள்ளார்.