புதுச்சேரி சட்டசபையில் ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார். முதல் முறையாக துணைநிலை ஆளுநரின் உரையில்லாமல், புதுவையில் சட்டப்பேரவை தொடங்கப்பட்டது.
இலவச மின்சாரம், இலவச குடிநீர்:
2020-21 நிதிநிலை ரூ.9 ஆயிரம் கோடியில் ரூ.1966 கோடி சம்பளத்துக்கும், ரூ.1177 கோடி ஓய்வூதியத்துக்கும், ரூ.1625 கோடி கடனுக்கான வட்டி செலுத்துவதற்கும், ரூ.1525 கோடி மின்சாரத்தும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற நலத்திட்ட உதவிகளுக்கு ரூ.896 கோடியும், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு ரூ.864 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு குடிநீர் வரி ரத்து செய்வதுடன், 100 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்தும் மக்களுக்கு மின்சார வரியும் ரத்து செய்து, 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்பட உள்ளது.
இலவச லேப்டாப்:
நவம்பர் 15-ந்தேதி முதல், கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப் பட உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி கட்டணம் ரத்து செய்து கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்திற்காக ரேசன் கடைகள் புத்தாக்கம் செய்யப்படவுள்ளது. அரசு பள்ளியில் இறுதியாண்டு படிப்போர் இணையம் மூலம் கல்வி கற்க இலவச லேப்டாப் வழங்கப்படவுள்ளது.
இந்திரா காந்தி மருத்துவ காப்பீட்டுத் திட்டம்:
மேலும், ரூ.4 கோடி செலவில் புதிய கல்வி தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடங்கப்படுவதுடன், புதுச்சேரியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது. நெல், சிறுதானியம் உள்ளிட்ட பயிர்வகைகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. போன் செய்தால் வீடுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது மற்றும் மாடித்தோட்டத்திற்கு 75% வழங்கப்படவுள்ளது. இத்துடன், இந்திரா காந்தி பெயரில், மருத்துவ காப்பீட்டுத்திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.