புரோ கபடி லீக் தொடரில் இதுவரை நடந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் பெங்களூரு புல்ஸ் அணி முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
புரோ கபடி 2022:
இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற புரோ கபடி லீக், தொடர் கடந்த மாதம் 7ம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், பங்கு பெற்றுள்ள 12 அணிகளும் கிட்டத்தட்ட 9 முதல் 10 போட்டிகளை விளையாடி முடித்துள்ளன. இதன் அடிப்படையில், பெங்களூரு புல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி, 3ல் தோல்வி மற்றும் 1ல் டிரா செய்து 35 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதனை தொடர்ந்து, புனேரி பல்டன் 9 போட்டிகளில் 5 ல் வெற்றி, 2ல் தோல்வி மற்றும் 2ல் டிரா செய்து மொத்தமாக 32 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக, யு மும்பா 31, தபாங் டெல்லி 29, பிங்க் பாந்தர்ஸ் 27 புள்ளிகளுடன் 3, 4 மற்றும் 5 வது இடத்தில் உள்ளனர்.
இந்த பட்டியலில், தமிழ் தலைவாஸ் அணி முதல் சில போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றும், டிரா செய்தும் தனது புள்ளி கணக்கை தொடங்கியது. இதன் மூலம், தமிழ் தலைவாஸ் அணி 9 போட்டிகளில் 3ல் வெற்றி, 4ல் தோல்வி மற்றும் 2ல் டிரா செய்து 23 புள்ளிகளுடன் 10 வது இடத்தை பிடித்துள்ளது. இனி அடுத்து வரும் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.