இந்தியாவில் 2020 முதல் புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் இதனை 21 ஆம் நூற்றாண்டு கல்விக்கொள்கை என அரசு கொண்டாடி வருகிறது. இந்த புதிய கல்வித்திட்டத்தை பற்றி பிரதமர் மோடி இன்று உரையாற்றியுள்ளார்.
புதிய கல்விக்கொள்கை:
இந்தியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரவுள்ளதாக அரசு அறிவித்தது. 21 ஆம் நூற்றாண்டு கல்வி திட்டம் மூலம் அறிவுமிக்க துடிப்பான சமூகத்தை உருவாக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ’21 ஆம் நூற்றாண்டின் பள்ளிக்கல்வி’ என்ற தலைப்பில் இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்லும் விதத்தில் ”ஷிக்ஷா பர்வ்” அதாவது கல்வி விழா மாநாடு நடைபெற்று வருகிறது. ஆனால் புதிய கல்வித்திட்டத்தில் உள்ள அம்சங்களுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த கல்வி விழா மாநாடு கடந்த 8 ஆம் தேதி தொடங்கி வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மோடி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “இந்த 21 ஆம் நூற்றாண்டின் புதிய கல்விக்கொள்கைகள் இந்தியாவை புதிய பாதைக்கு அழைத்து செல்லும். இதற்கான வேலைகளை தற்போது தான் ஆரம்பித்துள்ளோம். இந்த கல்விக்கொள்கை அனைத்து தரப்பினருக்கும் சமமாக அமல்படுத்தப்படும். இந்த கொள்கையை அமல்படுத்த வேண்டும் என நாடு முழுவதிலும் ஆசிரியர்களிடம் இருந்து 15 லட்சம் பரிந்துரைகள் வந்துள்ளது.
இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கல்வித்திட்டம் புதுமைகளை நிகழ்த்த கூடியதாக இருக்கும். தற்போது உள்ள கல்வியில் மதிப்பெண்களும், மதிப்பெண் சான்றிதழ்களும் தான் முக்கியமாக உள்ளன. ஆனால் இது மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடியது. அதனை மாற்றும் விதமாக தான் இந்த புதிய கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.