தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் 7 லட்சத்து 6,413 (90.93%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.36 சதவீதம் பேரும், மாணவர்கள் 86.99 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியாகி 3 வாரங்கள் கடந்த நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன் படி https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் “Application for Retotalling/ Revaluation” என்ற பகுதியை க்ளிக் செய்து விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளை முதல் ஜூன் 10 ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.
இது தவிர புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அதே போன்று விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் வாயிலாக தங்கள் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம் என தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.
மறுகூட்டல் & மறுமதிப்பீடு
- மொழி பாடத்திற்கான கட்டணம் – ரூ.550
- முக்கிய பாடத்திற்கான கட்டணம் – ரூ.275
இந்த கட்டணத்தை செலுத்தி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.