சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களது உடல் இன்று பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவருக்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் போலீசார் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் எஸ்பிபி அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலை மோசமடைந்த காரணத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. செப்டம்பர் 7ம் தேதி அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அவரது உடல்நிலை நேற்று மாலை திடீரென மோசமடைந்ததை தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கு உயிர் பிரிந்தது. திரையுலகினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த நிகழ்வினால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் எஸ்பிபி அவர்களின் பாடலை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இசை உலகின் “சகாப்தம்” மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் வாழ்வார்!!!
தாமரைப்பக்கத்திற்கு கொண்டு வரப்பட்ட எஸ்பிபி அவர்களின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் 21 குண்டு முழங்க போலீசாரின் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். அரசு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.