பிரபல தயாரிப்பாளர் வி.ஏ. துரை மருத்து வாங்க கூட பணம் இல்லாமல் இருப்பதாக வீடியோவில் கண்கலங்கிய சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் வி.ஏ. துரை
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா மற்றும் விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது பிதாமகன் தான். இப்படத்தை பாலா இயக்க, எவர் கிரீன் மூவிஸ் வி.ஏ. துரை தயாரித்திருந்தார். இந்த படம் மட்டுமின்றி விஜயகாந்தின் கஜேந்திரா, ரஜினியின் பாபா போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஆனால் பிதாமகன் படத்துக்கு பிறகு வி.ஏ. துரை தயாரித்த எல்லா திரைப்படமும் தோல்வியில் முடிந்து மிகப்பெரிய கடனாளியாக மாறினார். அதுமட்டுமின்றி பிதாமகன் வெற்றி பெற்றதால் பாலாவின் அடுத்த படத்தையும் தயாரிக்க முடிவு செய்த வி.ஏ. துரை இயக்குனர் பாலாவுக்கு 25 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார்.
ஆனால் பாலா அவருக்கு படத்தை பண்ணி கொடுக்காமல் இருக்கிறார். இதனால் அவர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது வி.ஏ. துரையை வெளியே துரத்தினர். ஆனால் தற்போது வரை பணம் கிடைக்காமல் தத்தளித்து வருவதாக தனது நண்பர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார். இந்நிலையில் வி.ஏ. துரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு , அவரது வாழ்க்கை சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு, பார்த்துக்கொள்ள கூட ஆள் இல்லாமல், காலில் ஆறாத ரணத்துடன், சாலிகிராமத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இவர் மருந்து வாங்க கூட சிரமமாக இருக்கிறது என்று கண்கலங்கி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவரின் தற்போதைய நிலையை குறித்து தயாரிப்பாளர் விடியல் ராஜு, தயாரிப்பாளர் சங்கத்திடம் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்கள் துரைக்கு எங்களால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்கிறோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் மன்னன் உறுதியளித்துள்ளார்.மேலும் துரை பழங்குடி என்ற படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.