நாடு முழுவதும் அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் முறைகேடுகளை தடுக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளன. அதில் ஒன்றாக வரும் நவம்பர் 1ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் OTP எண்ணை தெரிவித்தால் மட்டுமே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் முறை அமலுக்கு வருகிறது.
சமையல் எரிவாயு:
எல்பிஜி சிலிண்டரின் வீட்டு விநியோக முறை அடுத்த மாதத்திலிருந்து மாற்றப்பட உள்ளது. நவம்பர் 1 முதல், சிலிண்டர் ஹோம் டெலிவரிக்கு OTP தேவைப்படும். எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, திருட்டுகளைத் தடுக்கவும் சரியான வாடிக்கையாளரை அடையாளம் காணவும் டெலிவரி அங்கீகாரக் குறியீடு (டிஏசி) என்ற புதிய முறையை செயல்படுத்துகின்றன. அது குறித்த முக்கிய தகவல்கள் இதோ,
1. டெலிவரி அங்கீகாரக் குறியீடு (டிஏசி) முதலில் 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்தப்படும். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஏற்கனவே இது அமல்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது.
2. இதன் மூலம், வாடிக்கையாளர் சிலிண்டருக்கு முன்பதிவு செய்வதன் மூலம் மட்டுமே டெலிவரி முடிவடையாது. அவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு குறியீடு அனுப்பப்படும். அதனை டெலிவரி செய்ய வரும் நபரிடம் காண்பித்து சரிசெய்த பிறகே டெலிவரி நிறைவடையும்.
3. வாடிக்கையாளரின் மொபைல் எண் முறையாக அப்டேட் செய்யப்படாவிட்டால், சிலிண்டர் விநியோக ஊழியர் ஆன்லைனில் வாடிக்கையாளரின் வீட்டிலேயே புதுப்பித்துக் கொடுப்பார்.
4. இந்த முறையை செயல்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்களின் முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற விபரங்கள் தவறானவை என கண்டறியப்பட்டால் அவருக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
5. இத்திட்டம் 100 ஸ்மார்ட் நகரங்களுக்குப் பிறகு, பிற அனைத்து நகரங்களிலும் செயல்படுத்தப்படும்.
6. ஆனால் வணிக முறை சிலிண்டர்களுக்கு இது பொருந்தாது.