நீட் தேர்வால் தங்கள் உயிரை சில மாணவர்கள் மாய்த்து கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. அந்த வரிசையில் இந்த தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்டது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்த நீட் தேர்வு தொடர்ந்து பல மாணவர்களை காவு வாங்கி வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் இந்த தேர்வால் தற்கொலை செய்த செய்திகள் வெளியாகி கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் பயத்தைப் போக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனையை விரைந்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று கூட தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்கொலை செய்துகொள்ளாதீர்கள் என்று மாணவர்களிடம் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனுசியா நீட் தேர்வில் தோல்வி பயம் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். தற்போது 40 சதவீத தீக்காயங்களுடன் அனுசியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.