தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இம்மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்; 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள்; 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள்; 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிச. 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது.
முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதம், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. அனைத்து வாக்காளர்களும் ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகியோரை தேர்வு செய்ய நான்கு ஓட்டுகளை பதிவு செய்தனர்.பதிவான ஓட்டுகள் இரண்டு நாட்களாக எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.என்.தொட்டி ஊராட்சி மன்ற தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. இத்தேர்தலில் அவ்வூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெயச்சந்தியா ராணி (21) அவர்கள் போட்டியிட்டார்.
அவ்வூராட்சியில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கல்லூரி மாணவி ஜெயச்சந்தியா ராணி அவர்கள் 210 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜெயச்சந்தியா ராணி 1,170 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 950 வாக்குகளும் பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.என்.தொட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயச்சந்தியா ராணி, கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த மாணவியின் தந்தை ஜெயசாரதி ஏற்கனவே அந்த ஊராட்சியில் தலைவர் பதவி வகித்தவர் ஆவர்.