கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கரிபூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானிகள் உட்பட 17 பேர் பலியாகினர். 123 பேர் காயமடைந்தனர். இந்த விமான விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மத்திய சிவில் விமான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விமான விபத்து:
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு சார்பில் ‘வந்தே பாரத்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் இதுவரை லட்சக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். அவ்வாறு நேற்று துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கனமழை காரணமாக விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
ஏர் இந்தியாவின் ஏ.எக்ஸ்.பி -1344 எக்ஸ்பிரஸ் விமானம் துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு 191 பயணிகளை ஏற்றி வந்தது. நேற்று இரவு 7.41 மணியளவில் கோழிக்கோட்டின் கரிபூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் மழை காரணமாக ஓடுபாதையில் இருந்து சறுக்கியது. இதனால் விமானம் 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கி இரண்டு துண்டுகளாக உடைந்தது. மழை பெய்த காரணத்தால் விமானத்தில் தீ பிடிக்காமல் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.
இந்த விமானத்தில் 174 பயணிகள், பத்து குழந்தைகள், இரண்டு விமானிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் விமானிகள் உட்பட 17 பேர் விபத்தில் இறந்தனர். 123 பேர் காயமடைந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு விமான தளம் ‘டேபிள் டாப்’ (குன்றுக்கு மேல் உயரத்தில் விமான ஓடுதளம்) என்பதால் அதில் விமானத்தை இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
விமானத்தின் தலைமை விமானி தீபக் சாத்தே இந்த விபத்தில் இறந்துள்ளார். சதே இந்திய விமானப்படையிலிருந்து விங் கமாண்டராக ஓய்வு பெற்றார். பின்னர் ஏர் இந்தியாவில் சேர்ந்து 15 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார்.