கந்த சஷ்டி கவசத்தை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டு கைது செய்யப்பட்டு உள்ள கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நபிகள் நாயகத்தை விமர்சித்த ஒருவர் மீதும் குண்டாஸ் நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர்.
கருப்பர் கூட்டம் கைது:
கருப்பர் கூட்டம் எனும் யூ டியூப் சேனலில் இந்து மதத்தின் கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து மிகவும் ஆபாசமான கருத்துகளை கூறி வீடியோ பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த சேனலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது. இதனால் கருப்பர் கூட்டம் சேனலில் இதுவரை பதிவிடப்பட்டு இருந்த 500 வீடியோக்களும் நீக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அவர்களின் உத்தரவின் பேரில், கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மற்றும் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வந்த இந்து தமிழர் பேரவையின் தலைவர் கோபால் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் இருவரும் 1 வருடத்திற்கு வெளிவரமுடியாது .