தமிழக அரசானது ஜான் பென்னி குயிக் அவர்களின் பிறந்தநாளை முதல் முறையாக அரசு விழாவாக கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரம்!!
இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் ஜான் பென்னி குயிக் அவர்கள் தனது அயராத முயற்சியால் பல தடைகளையும் தாண்டி முல்லைப் பெரியாறு அணையை 1895ம் ஆண்டு கட்டிமுடித்தார். இது தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது.
மக்கள் மனதில் நீங்க இடம்!!
அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதில் தமிழக மற்றும் கேரளா அரசுகளிடையே நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது. அது தொடர்பாக நடைபெற்ற போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் அணை குறித்த வரலாறும் மற்றும் அதனை கட்டிய பொறியாளர் ஜான் பென்னி குயிக் அவர்களின் வரலாறும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தது.
தேனி மாவட்ட மக்களின் கடவுள்
ஜான் பென்னி குயிக் அவர்களை தேனி மாவட்ட மக்கள் கடவுளாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். அவரது பிறந்தநாளான ஜனவரி 15 அன்று அங்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பாலார்பட்டி மற்றும் சுருளிபட்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் அவரது உருவ படத்தை வைத்து வணங்குகின்றனர்.
அரசின் மணிமண்டபம்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசானது லோயர்கேம்ப் பகுதியில் பென்னிகுக் மணிமண்டபமும், அவரது முழு உருவ வெண்கல சிலையையும் நிறுவி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் பென்னிகுக் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 15-ந்தேதி முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்படவுள்ளது.
அன்றைய நாள் விவசாயிகள் அனைவரும் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.