ஜார்கண்ட் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடந்து தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அந்த மாநில அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு காரை பரிசாக அளித்துள்ளார். இந்த செயலுக்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
ஜார்கண்ட்:
ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரான ஹேமந்த் சோரன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெற்ற நிலையில் செப்டம்பர் 18 இல் தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கார் பரிசாக அளிப்பதாக மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ கூறியிருந்தார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
தேர்வு முடிவுகளும் வெளியாகின. ஆனால் முதலிடம் பிடித்த மாணவர்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை. இப்பொழுது முதலிடம் பிடித்த மாணவர்களின் பெயர் வெளியாகியுள்ளது. 12 ஆம் வகுப்பில் அமித் குமார் என்ற மாணவன் 457 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வந்துள்ளார். 10 ஆம் வகுப்பில் மனிஷ் குமார் கடியார் என்பவர் 490 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ராஞ்சியில் உள்ள மாநில சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில கல்வித்துறை அமைச்சர் கார்களை முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது, நான் அளித்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றியுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் பரிசை வென்ற மாணவர்களிடம் பேசியபோது, நான் இந்த பரிசு கிடைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறியுள்ளனர். இந்த வருடம் , ஜார்கண்ட் மாநிலத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்வை 2,31,300 மாணவர்கள் எழுதினர், அதில் 1,71,647 பேர் தேர்ச்சி பெற்றனர். இதேபோல், 10 ஆம் வகுப்பு தேர்வுகளை 3,85,144 மாணவர்கள் எழுதினர், அதில் 2,88,928 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.