சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் புதிய சாதனைகளை படைத்துள்ளார். இதன் மூலம் 200 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ஆனார் தோனி. அதே நாளில் அவர் சென்னை அணிக்காக 4000 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார். நேற்று சென்னை அணிக்கு மோசமான நாளாக இருந்தாலும் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு புதிய சாதனை படைத்த நாளாக அமைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சிஎஸ்கே கேப்டன் தோனி 200 வது ஐபிஎல் போட்டியில் நேற்று விளையாடினார். தோனி இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரராவார். அதற்கடுத்த இடங்களில் ரோஹித் சர்மா (197), சுரேஷ் ரெய்னா (193), தினேஷ் கார்த்திக் (191) மற்றும் விராட் கோஹ்லி (186) போன்ற முக்கிய வீரர்கள் உள்ளனர். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி கடந்து வந்த மற்றொரு மைல்கல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4,000 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இருப்பினும், சென்னை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதுவரை 4,257 ரன்கள் விளாசியுள்ள ரெய்னா சில சொந்த காரணங்களுக்காக இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. எம்.எஸ்.தோனி மொத்தமாக இந்தியன் பிரீமியர் லீக்கில் 4571 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ளார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 2 தொடர்களில் 574 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் கோப்பைகள்:
2010, 2011 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கேவை 3 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் தோனி. மேலும் ஐபிஎல் டீம்களில் வெற்றி சதவீதத்திலும் தோனி டாப்பில் உள்ளார். ஐபிஎல் கேப்டனாக அவர் பங்கேற்ற 183 போட்டிகளில் 107 இல் வெற்றி பெற்றுள்ளார்.
இருப்பினும், நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. 3 முறை சாம்பியனான ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் விலகியது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. 9 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தோனியின் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது. இம்முறை தொடர் தோல்விகளால் தோனி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார். அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என அவர் மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.