குடியுரிமை சட்ட திருத்த மசோதா – முழு விளக்கம்

0
குடியுரிமை சட்ட திருத்த மசோதா

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சமயப் பிரிவினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 09 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தினார்.

ஆதரவும் எதிர்ப்பும்:

மக்களவையில் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதராவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்ததால் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.  மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்த மசோதா 11 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது, மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திருத்த மசோதாவிற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் 12 டிசம்பர் 2019 அன்று ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டத்தின் வரலாறு:

1955-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது கொண்டு வரப்படும் குடியுரிமைத் திருத்த சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இக்குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முதன்முதலாக கடந்த ஆண்டு சனவரி மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16-ஆவது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது. எனவே தற்போது மீண்டும் இந்த மசோதாவை மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் 11 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதனால் பாதிக்கப்படுபவர்கள்:

1955-ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு இந்திய அரசு குடியுரிமைச் சான்று வழங்காது. மேலும் கடவுச் சீட்டு, விசா மற்றும் செல்லத்தக்க ஆவணங்கள் இன்றி இந்தியாவில் நுழைந்து, நீண்டகாலம் வாழ்பவர்களை சட்டவிரோத குடியேறிகள் எனக்கருதப்படுவர்.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

     1. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இசுலாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்றவர்கள் இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும்.

     2. தற்போது தொடர்ந்து 5 ஆண்டுகள் இடையீடுயின்றி இந்தியாவில் வாழ்ந்தவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படுகிறது.

     3. தற்போதைய குடியுரிமை சட்டத் திருத்தத்தில் 5 ஆண்டுகள் இந்தியாவில் தொடர்ந்து வாழும் இசுலாமியர் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

     4. இந்த சட்ட திருத்த மசோதா, 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வகை செய்கிறது.

சட்ட விரோத குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள்:

சட்டவிரோத குடியேறிகளை சிறையில் அடைத்தல் அல்லது அவர்களுக்குரிய நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர். தற்போதைய சட்டத்திருத்தின் படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி, 31 டிசம்பர் 2014 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் சமணர்களை சிறையில் அடைக்க அல்லது நாடு கடத்தப்படமாட்டாது.

உலக நாடுகள் ஆதரவு:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாகிஸ்தான், மலேசியா தவிர்த்து, ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வளைகுடா நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் இச்சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடும் எதிர்ப்பு:

இந்த குடியுரிமை சட்டத் திருத்த முன்வடிவம் சமயத்தின் அடிப்படையில் இந்தியாவை பிளவுப்படுத்தும் என இந்திய தேசிய காங்கிரசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டின. மேலும் இச்சட்ட திருத்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டம், உறுப்பு 14க்கு எதிரானதும் என்றும், ஒரு குறிப்பிட்ட சமயத்தை சேர்ந்தவர்களை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் சில விலக்களிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இச்சட்டத்திருத்திற்கு எதிராக கிளா்ச்சிகள் எழுந்திருக்கிறது. வங்காளதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த வங்காள மொழி பேசும் இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதை வடகிழக்கு மாநில மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தங்களது மாநிலத்தில் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதுதான் அவா்களின் அச்சம். அவா்கள் வங்காளிகளை இந்துக்கள், முஸ்லிம்கள் என்று பாா்க்காமல் வங்காளிகள் என்று கருதுகிறாா்கள்.

மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான து. இரவிக்குமார் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோரினார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், ‘இந்தியக் குடியுரிமை’ என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009-இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்தச் சட்டத்தின் பிரிவு 5-இன் படி பதிவு செய்துகொண்ட புலம்பெயர்ந்த எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6-ன்படி இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாக இந்தியாவில் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here