சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமை கொண்ட ஷாம் சரண் நெகி என்ற 106 வயது கொண்ட முதியவர், இமாச்சல் பிரதேசத்தில் இன்று உயிரிழந்தார்.
அதிர்ச்சி மறைவு:
கடந்த 1947 ஆம் ஆண்டு, இந்தியா பிரிட்டிஷ் அதிகாரத்திடமிருந்து விடுதலை பெற்றது. அதன்பிறகு 1951 ஆம் ஆண்டு தான், நாட்டின் முதல் பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது அக்டோபர் 25 ஆம் தேதி நாட்டிலேயே முதன் முதலாக இமாச்சல் பிரதேசத்தைச் சார்ந்த ஷியாம் சரண் நெகி என்பவர் தான் வாக்களித்தார். 1917 ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்த இவர், அங்குள்ள கல்பா எனும் பகுதியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதுவரை, 34 முறை இவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். இந்த மாநிலத்தில், வரும் 12ஆம் தேதி நடக்க உள்ள தேர்தலுக்காக இவர் 3ம் தேதியே தபால் ஓட்டு போட்டிருந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவுடன் இருந்து வந்த இவர், தனது 106 வயதில் இன்று காலமானார். அவரது மறைவு குறித்து பதிவிட்ட மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர், ஷியாம் சரண் நெகியின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கும் என்று அறிவித்தார்.
இது போக, இவரின் இறுதி சடங்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்தார். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் செய்தி குவிந்து வருகிறது.