தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது சில இடங்களில் மழை பொலிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்கள் அதுமட்டுமின்றி புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் குஜராத் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.