திண்டுக்கலில் காதலியின் கண் முன்னே காதலனை காதலியின் உறவினர்களே கல்லால் அடித்து கொன்ற கொடூர நிகழ்வு அரங்கேறி உள்ளது. நத்தம் அருகே காதலால் ஏற்பட்ட விளைவால் ஒரு உயிர் பறிபோனது. படத்தை மிஞ்சும் அளவிற்கு நடந்த இந்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதலனை கல்லால் அடித்து கொன்ற கொடூரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தை சேர்ந்த சேதுராஜனின் மகன் பாரதிராஜா இவருக்கு வயது 21 இவர் கேட்டரிங் படித்துவிட்டு சிறுமலையில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். அதேபோல் ராசுவின் மகள் பரமேஸ்வரி இவருக்கு வயது 20. கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காதலை அறிந்த பெண்வீட்டார் அந்த பெண்ணிற்கு வேறொரு திருமணம் செய்ய முடிவு செய்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
இந்த செய்தியை பரமேஸ்வரி தன் காதலன் பாரதிராஜாவிடம் தெரிவிக்க ,அதிர்ந்து போன பாரதிராஜா அந்த பெண்ணை அழைத்து வர அவரின் வீட்டிற்கு தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு சென்று அந்த பெண்ணை அழைத்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு உள்ளார். இதை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள், அண்ணன் மலைச்சாமி உட்பட அனைவரும் பாரதிராஜாவிடம் சண்டை போட்டு உள்ளனர். இந்நிலையில் கோபம் தலைக்கு ஏறிய மலைச்சாமி அங்கிருந்த கல்லை எடுத்து பாரதிராஜாவை மிக கடுமையாக அடித்து உள்ளார்.
இதையடுத்து கீழே விழுந்து உயிருக்கு போராடிய பாரதிராஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்லையே தன் உயிரை இழந்தார். காதல் பட பாணியில் அரங்கேறியுள்ளது இந்த சம்பவம். இதை அறிந்த திண்டுக்கல் மாவட்ட உயர் அதிகாரிகள் அங்கு சென்று அந்த பெண்ணின் பெற்றோர்கள், அண்ணன் உட்பட அனைவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர்கள், அண்ணன் உட்பட 4 பேரை கைது செய்து உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.