தற்போது உள்ள தலைமுறையினர் பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாகவே உள்ளது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் மாறிவரும் பழக்கவழக்கங்கள். இப்பொழுது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
நாம் அனைவரும் பழையகால பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் என அனைத்தையும் மறந்து விட்டோம். அந்த காலத்து மக்கள் அதிகம் சாப்பிட்டு வந்த பழைய கஞ்சியில் கூட அவ்வளவு சத்துக்கள் அடங்கியிருந்தது. தானிய வகைகளில் கூட அனைத்து சத்துக்களும் அடங்கியிருக்கும்.
ஆனால் நாமோ மேற்கத்திய உணவுகளான பீட்ஸா, பர்கர் என்று சாப்பிட்டுக் கொண்டுள்ளோம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்பட்டு விடுகிறது. மேலும் உடல்சோர்வு, அலர்ஜி, காயங்கள் ஆறுவதற்கு தாமதமாவது போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படுகிறது.
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் 2 பாதாம் சாப்பிட்டு வந்தால் நல்லது. மேலும் வைட்டமின் சி, இ, ஏ அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட், பச்சை காய்கறிகள், நெல்லிக்காய் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தினமும் ஒரு கீரை வகைகளை சாப்பிட்டு வந்தால் நல்லது. அரைக்கீரை தினமும் அல்லது வாரத்திற்கு 3 முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு வாரத்திற்கு 2 முறை குடித்து வர வேண்டும். இதில் உள்ள அமிலத்தன்மை உடலில் உள்ள பாக்டீரியாவை அழிக்கும். மேலும் மீன் வகைகள், பருப்பு வகைகள், தயிர் மற்றும் பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது. உணவுகளில் இஞ்சியை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பாலில் மஞ்சள்தூள் கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சின்ன வெங்காயமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஏனெனில் அதில் உள்ள அலிலின் என்ற வேதிப்பொருள் உடலில் நச்சு பொருட்கள், பாக்டீரியாக்கள் சேருவதை தடுக்கிறது.
இப்பொழுது உள்ள கொரோனா சூழ்நிலையில் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். எனவே நாம் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வோம்.