கடல் உணவான மீனில் அதிக புரத சத்துக்கள் அடங்கியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த மீன் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது கண்ணில் கோளாறு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். முடி அடர்த்தியாக வளர மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது புதிய விதமாக வறுத்த மீன் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் – 1 கி
தேங்காய்ப்பால் – 1 கப்
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 3
செய்முறை
முதலில் மீனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான மீனையும் எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது அந்த மீனை தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து அந்த தண்ணீரில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதன் பிறகு வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.
இப்பொழுது நன்கு வதங்கியதும் அதில் நாம் கரைத்து வைத்த புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அதில் சிறிது தேங்காய் பாலையும் சேர்த்து கொள்ளவும். உங்களுக்கு காரம் வேண்டும் என்றால் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் போது வறுத்து வைத்த மீனை அதில் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான ‘வறுத்த மீன் குழம்பு’ தயார்.