தமிழகத்தில் வரும் செப். 16ம் தேதி முதல், தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
காலை சிற்றுண்டி
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (15.09.22) தொடங்கி வைக்கிறார். அதன்பின், இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பிற பகுதிகள் அடங்கியுள்ள மாவட்டங்களில், செப்.16ம் தேதி (நாளை மறுநாள்) முதல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியாளர்களால் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், ஏதேனும் ஒரு பள்ளியில், அமைச்சர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.