தமிழகத்தை அடுத்து டெல்லியிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொது இடத்தில் கொண்டாட தடை விதிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள் வெளியீடு:
தமிழகத்தில் கடந்த இரண்டாம் அலை பரவலின் போது பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தில் தமிழக அரசு சில தளர்வுகளை அளித்தது. இந்த தளர்வுகளில் இந்த மாதம் அதாவது, செப்டம்பர் 10ம் தேதி வரவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் பொது இடத்தில் சிலை வைத்து கொண்டாட தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும், இந்த பண்டிகையை கொண்டாட வேண்டிய வழிகாட்டு நெறிகளையும் மாநில அரசு வெளியிட்டது.
அதாவது, மக்கள் ஒன்றாக ஒரே இடத்தில் கூடி இந்த விழாவை கொண்டாட வேண்டாம் எனவும், தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் கரைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். இதனை பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்த போது, கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் விளக்கமளித்தார்.
இதே போன்ற கட்டுப்பாடுகளை தற்போது டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதாவது, மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த வேண்டாம் எனவும், சமூக இடைவெளியுடன் வீட்டிலேயே இந்த பண்டிகையை கொண்டாடிக் கொள்ளலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட உள்ளது.