தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு அதிரடியாக தடை விதித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை விவகாரம்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கொரோனா ஊரடங்கு நாளில் தங்கள் கடையை அதிக நேரம் திறந்த வைத்திருந்தனர். இதுகுறித்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பிறகு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இவர்கள் இறப்புக்கு காரணம், போலீசாரும், பிரண்ட்ஸ் ஆப் போலீசாரும் போலீஸ் நிலையத்தில் அவர்களை விடிய விடிய சித்ரவதை செய்து தாக்கியுள்ளனர் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை குறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை, விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டதை அடுத்து வியாபாரிகளை போலீஸ் நிலையத்தில் தாக்கிய சம்பவத்தில் போலீசாருடன் பிரண்ட்ஸ் ஆப் போலீசார் 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளது. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் போலீசார் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது.
பிரண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு தடை..!
இந்நிலையில், பிரண்ட்ஸ் ஆப் போலீசாரை பணியில் ஈடுபடுத்துவது குறித்து அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் முடிவு செய்யலாம் என்று டிஜிபி திரிபாதி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட்டார். அதை தொடர்ந்து திருச்சி, மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள்பட 11 மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பாளர்கள் உடனடியாக களத்தில் இறங்கி, பிரண்ட்ஸ் ஆப் போலீசார் காவல் துறையுடன் இணைந்து செயல்படுவதற்கு தடை விதித்துள்ளனர். அதேபோல பிரண்ட்ஸ் ஆப் போலீசார் பணிக்கு வர வேண்டாம் என்று என்றும் அந்தந்த மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவிட்டனர்.