பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்தார்.
இலவச சானிட்டரி நாப்கின்:
மாதவிடாய் தொடர்பான தவறான தகவல்கள், மூட நம்பிக்கைகள் மற்றும் அறியாமையை உடைக்கும் வகையில் ராஜஸ்தான் அரசு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசு , ‘’நான் சக்தி உதான்’ எனும் திட்டத்தைக் கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் படிப்படியாகக் கொண்டு வரப்படுகின்றன.
அதன்படி, 1.20 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என கடந்த ஆண்டே ராஜஸ்தான் அரசு அறிவித்தது. முதற்கட்டமாக இலவச நாப்கின்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில், 2022-23 பட்ஜெட்டில், இந்தத் திட்டத்துக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் அடிப்படையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக மாணவர்கள் கவனத்திற்கு – இது நடந்தா? பிரச்சனை உங்க பெற்றோருக்கும் தான்! போலீஸ் பகிரங்க எச்சரிக்கை!!
இந்த திட்டத்துக்காக 2022-23 நிதியாண்டில் ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வகையில் 33 மாவட்டங்களில் உள்ள 60,361 அங்கன்வாடி மையங்களில் 1.15 கோடி பயனாளிகளுக்கும், மாநிலத்தில் உள்ள 34,104 அரசுப் பள்ளிகளில் 26.48 லட்சம் பயனாளிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆர்எம்எஸ்சிஎல், சார்பில் 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கி உள்ளதாகவும், இதற்காக ரூ. 104.78 கோடியை ஆர்எம்எஸ்சிஎல் செலவு செய்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.