தமிழ் சினிமாவில் பல நாட்டுப்புற பாடல்கள் பாடிய பிரபல நாட்டுப்புற பாடகர் மாணிக்க விநாயகம் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்,
மாரடைப்பால் உயிரிழப்பு :
தமிழ் சினிமாவில் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் அழிக்க முடியாத இடத்தை பிடித்திருந்தவர் பாடகர் மாணிக்க விநாயகம். நாட்டுப்புற பாடல்கள் மட்டுமல்லாது, சந்தோஷ் சுப்பிரமணியம், திருடா திருடி உள்ளிட்ட பல படங்களில் தனது குணசித்திர நடிப்பை வெளிப்படுத்தி பிரபல நடிகராகவும் வலம் வந்தார்.
சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல பாடல் நிகழ்ச்சிகளில் நடுவர் மற்றும் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலிவுற்று காணப்பட்ட மாணிக்க விநாயகம் அவர்கள் தனது 77 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார்.
இதையடுத்து, இன்று காலை 7.30 மணியளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 800க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, பெயருக்கு ஏற்றபடி மாணிக்கமாக வாழ்ந்த நல்ல பாடகரை இழந்து நிற்கும் மக்களுக்கும், அவரது குடும்பத்துக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார். இன்று அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல திரைப்படப் பாடகர் திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.https://t.co/okHUvLQPaM pic.twitter.com/VtBuSbziy2
— M.K.Stalin (@mkstalin) December 26, 2021